செக்கச்சிவந்த வானம்




  • நடிகர்கள் : அரவிந்த் சுவாமி,விஜய் சேதுபதி,அருண் விஜய்,சிம்பு, ஜோதிகா,ஐஸ்வா்யா ராஜேஷ்,அதிதி ராவ்,பிரகாஷ் ராஜ்,ஜெயசுதா,மன்சூா் அலிகான்.

  • இயக்குனர் : மணிரத்னம்

திரைக்கதை :

        சென்னையை கலக்கும் மிகப்பெரிய டான் தான்  பிரகாஷ் ராஜ். அவர்  மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அரவிந்த் சாமி, அவருடைய மனைவி ஜோதிகா, கள்ளக்காதலி அதீதி ராவ் ஹைதாரி மற்றும் குழுந்தைகளுடன் அப்பா பிரகாஷ் ராஜின் தொழிலுக்கு பக்கபலமாக சென்னையிலேயே உடன் இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய், துபாயில் இலங்கையை சேர்ந்த காதல் மனைவி ஐஸ்வர்யாராஜேஷ் இவர்கள்  குழந்தைகளுடன் செட்டில் ஆகி ஷேக்குகளுடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்து அப்பாவின் சப்போர்ட்டில் சம்பாதித்து வருகிறார். மூன்றாவது மகன் தான் இவர் சிம்பு செர்பிய நாட்டில் காதலியுடன் கள்ளச்சந்தையில் துப்பாக்கிகளை வாங்கி விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகிறார். 

சென்னையை கலக்கும் பிரகாஷ் ராஜ்க்கும், அவருக்கு எதிரியான தியாகராஜனுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் மனைவியுடன் காரில் கோயிலுக்கு சென்று திரும்பும் போது, அவர் காருக்குள்வெடிகுண்டு வீசப்படுகிறது. இதில் உயிர் பிழைத்து தீவிர சிகிச்சை பிரிவில் பிரகாஷ்ராஜும், ஜெயசுதாவும் அனுமதிக்கப்படுகிறார்கள். 

இதையறிந்த அருண் விஜய்யும், சிம்புவும் வெளிநாடுகளில் இருந்து சென்னை வருகிறார்கள். மகன்கள் மூன்று பேரும், அப்பாவின் இந்த நிலைக்கு யார் காரணம் ?  என்று அரவிந்தசாமியின் பால்ய காலத்து நண்பரும் சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்  விஜய் சேதுபதி துணையுடன் துப்பறிவில் இறங்கி., எதிரி தியாகராஜன் தான் காரணம்  என அவர் மருமகனை போட்டுத் தள்ளி அவர் இல்லை எனத் தெரிந்ததும், ஒய்ந்து  அவரவர் வேலையைப் பார்க்கபோக,சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் பிரகாஷ் ராஜ் திடீர் நெஞ்சுவலியால் உயிரிழக்கிறார். 

அதன்பிறகு அவருடைய இடத்திற்கு யார் வருவது ? என்று மகன்கள் மூன்று பேருக்குமிடையில் போட்டி ஏற்படுகிறது. இந்த போட்டியில் ஒருவரை ஒருவர் உற்றார், உறவுக்காரர் எனப் பார்க்காமல்  தாக்கிக் கொள்ள, இறுதியில் வெற்றி பெற்றது யார் ? என்பதை வித்தியாசமும், விறுவிறுப்புமாக சொல்ல முயன்று அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறது "செக்கச்சிவந்த வானம்" .


நடிகர்கள் பற்றி :

              படத்தில் பிரகாஷ்ராஜின் மூத்த மகனாக, வரதனாக நடித்திருக்கும் அரவிந்த் சாமி , அற்புதமான நடிப்பை செம்மயாக காட்டிஇருக்கிறார். சென்னையில் தந்தையுடனேஇருக்கும்  இவர், தந்தை மற்றும் தமையன்களையையே பதவிக்காக போட்டுத் தள்ளதுணிவதும் நான் தான் அடுத்த தாதாவிற்கு தகுதியானவன் என்று இரு மாப்பில் திரிவதும் மட்டும் அதற்கு மனைவி ஜோதிகா துணையாக இருப்பது நம்பும் படியாக இல்லை. மற்றபடி அரவிந்த்சாமியின் நடிப்பு  சிறப்பு. 

பிரகாஷின் இரண்டாவது மகனான தியாகு அருண் விஜய், துபாய் ஷேக்குகளுக்கே போக்கு காட்டும் தனது துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை வழக்கம் போலவே கவர்ந்திருக்கிறார். அதே நேரம், இவரை எதிர்க்கவே செய்யாத சிம்புவின் காதலியை இவர் ஆள் வைத்து தீர்த்து கட்டுவதும் அபத்தம். 

பிரகாஷ்ராஜின் மூன்றாவது மகனாக  சிம்பு அதிகமாக காதலி டயானாவுடனும் , அண்ணன் அர்விந்த்சாமியின் கள்ளக்காதலி அதீதிராவுடனும் இளமை துள்ளலுடன் புகுந்து விளையாடி இருக்கிறார். 

அரவிந்த் சாமியின் பள்ளி பருவ நண்பராகவும், ரவுடியிஸம் பிடிக்காத போலீஸ் அதிகாரியாகவும் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் குடும்பத்தின் கூடவே இருந்து தன் பாணியில் காமெடியாகவும் , கலர்புல்லாகவும் போட்டு தாக்கியிருக்கிறார். 

இவர்கள் எல்லோர்க்கும் மேலாக தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பால் கிழட்டு கேங்ஸ்டாராக வயதான நாயகராக வரும் டான் சேனாபதி -பிரகாஷ் ராஜ் மிரட்டலாக நடித்திருக்கிறார். 


நடிகைகள் பற்றி :

பிரகாஷ்ராஜின் மனைவி ஜெயசுதா,அரவிந்த்சாமியின் மனைவி சித்ராவாக வரும் ஜோதிகா, அர்விந்தசாமியின் கள்ளக்காதலி 'கம்' மீடியா லேடியாக வரும் அதிதிராவ், அருண் விஜய்யின் மனைவியாக இலங்கை தமிழச்சி ரேணுவாகவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்புவின் காதலி சாயாவாக வரும் டயானா எரப்பா, மற்றும் , ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொஞ்ச நேரத்தில் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடிக்கும்படி கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக  நடித்திருக்கிறார்கள். 

கலைஞர்கள் : 

ஸ்ரீகர் பிரசாத் தன் கத்திரியை கண்ட மேனிக்கு பயன்படுத்தி வேறலெவலில் படத்தை கொடுக்க நினைதிருக்கிறார். ஆனால் பலனில்லை .

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் ஆறுதலும் , கூடுதல் பலமும் சேர்த்திருக்கிறது. 

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் "செவந்து போச்சு வானம். " தங்குமா இதயம் ?" உள்ளிட்டபாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது திரையில் பார்க்கும் போது புத்துணர்ச்சியோடு இருக்கிறது. அதற்கும் மேல் இப்பட பின்னணி இசை இப்படத்திற்கு பெரும்பலம்

என் பார்வை : 

     தாதாவான தந்தை பிரகாஷ் ராஜ் இறந்த பிறகு, அந்த இடத்தை பிடிக்க நினைக்கும் மூன்று மகன்களின் போட்டியை மையமாக வைத்து, தன்னுடைய பாணியில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம்., அதை இந்த காலத்திற்கு ஏற்ப படம் பிடிக்கிறேன் என கதை அமைப்பிலும் , காட்சிப்படுத்தலிலும் நிறையவே வீழ்ந்திருக்கிறார். 

 அண்ணன் தம்பிகளுக்குள் பெரிய காரணங்களே இல்லாது துப்பாக்கி சண்டைநடத்தி கேங்ஸ்டார் படம் தந்திருக்கும் மணிரத்னம் இன்னும் நிறைய யோசித்திருக்கலாம். 

"உனக்கு எதுவும் கிடையாது என் மற்ற இரண்டு பிள்ளைகளுக்கு தான் எல்லாம்."என இப்படி எதுவும் சொல்லாத அப்பா பிரகாஷ் ராஜை அர்விந்தசாமி தீர்த்து கட்டி விட்டு பட்டம் சூடிக் கொள்ள முயல்வதும் , தன் அப்பாவை தீர்த்து கட்டிய பிரகாஷ்ராஜுக்கு அவரது மனைவி ஜெயசுதாவும் சுதாவின் தம்பி சிவாஆனந்தும் சப்போர்ட்டாக இருப்பதும் ,ஜோதிகா, தன் கணவர் அர்விந்தசாமி கள்ளக்காதலிக்கு காசு பணம் எதுவும் தருவதில்லை என அவரை கண்டிக்காமல் தண்டிக்காமல் விடுவதும் , அண்ணன் தம்பிகளுக்குள் அப்பன் சொத்துக்காக ஒரு முறை கூட நேரடியாக சண்டையே வராமல் ஒருத்தரை ஒருத்தர் தீர்த்து கட்ட முயல்வதும் , தீர்த்துகட்டுவதும் தங்கள் குடும்பங்களை தாங்களே கொன்று குவிப்பதும்  அதை போலீஸ் ப்ரண்ட் விஜய் சேதுபதியூஸ் செய்து கொள்வதும் , இறுதியில் எங்க அப்பாவும் ஒரு குட்டி கேங்ஸ்டார். அதனால அவர் செத்து போயிட்டார். அதனால எனக்கு கேங்ஸ்டார்களை பிடிக்காது என கதை சொல்வதும் . நம்ப முடியாத 'ஹம்பக்' டிராமாமாக்களாக இந்தப்படத்தை பெரிதும் பலவீனப்படுத்துகிறது ! 

எனவே என் கருத்து படி "செக்கச் சிவந்த வானம்’ இரத்தசிவப்பாக இருக்கிறது ! மிக சிறப்பாக இல்லை!

நன்றி ...





செக்கச்சிவந்த வானம் செக்கச்சிவந்த வானம் Reviewed by Vaigai Tamil on October 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.